போலீஸ் தாக்கியதில் பலியான அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!
அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
காவல் துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் பலியானார். இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
Advertisement
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் உலுக்கிய நிலையில், அஜித் குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினும் பலியான இளைஞரின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு போனில் பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அஜித் குமாரின் தம்பி நவீன் குமாருக்கு அரசுப் பணிக்கான ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினர். அஜித்குமாரின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அரசு சார்பில் நிவாரணங்களை சிவகங்கை ஆட்சியர் பொற்கொடி மற்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் வழங்கினர்.
Ajith Kumar's younger brother gets a government job! He gets a free house and plot!