முகப்பு
தமிழ்நாடு

நாளை குரூப் 4 தேர்வு: தேர்வர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்...

Updated On : 11 ஜூலை 2025, 9:03 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.07/2025, நாள் 25.04.2025-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு 12.07.2025 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர்.

இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

தேர்வு தொடர்பான மந்தணப் பொருட்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசு கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 4,922 தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Videograph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று அதாவது 12.07.2025 முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே சென்று விடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்

மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கான மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

summary

TNPSC has issued important instructions to candidates as the TNPSC Group-4 examination is scheduled to be held across Tamil Nadu tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.