இளையராஜா தொடர்ந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தைச் சேர்க்க உத்தரவு!
இளையராஜா தொடர்ந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தைச் சேர்க்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு குறித்து....
சென்னை: உரிய அனுமதியின்றி மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தில் 'ராத்திரி சிவ ராத்திரி' பாடல் பயன்படுத்தியதை எதிர்த்து இளையராஜா தொடர்ந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தைச் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், "நடிகை வனிதா விஜய்குமார், நடன இயக்குநர் ராபர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மிஸஸ் & மிஸ்டர். இந்தப் படத்தில் எனது இசையில் வெளிவந்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம் பெற்ற ‘ராத்திரி சிவ ராத்திரி’ பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காப்புரிமை மீறிய செயலாகும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில், மிஸஸ் & மிஸ்டர் படத்தில் அனுமதியின்றி தனது பாடலைப் பயன்படுத்தியதோடு, அந்தப் படத்தின் விளம்பரங்களில் தனது பெயரும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வனிதா விஜயகுமார் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வனிதா விஜயகுமார் தரப்பில், "இளையராஜாவின் 4,850 பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்களிடமிருந்து தான் இந்தப் பாடலை வாங்கினோம். இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த இளையராஜாவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாக, தெரிவிக்கப்பட்டது .
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சோனி மியூசிக் நிறுவனத்தை வழக்கில் சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க: பிரிட்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி!