ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை! 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பின்றி ஆயுள்!!
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பின்றி ஆயுள் தண்டனையுடன், ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி எம். ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
11 பிரிவுகளில் குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில், ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிா் நீதிமன்றம் கடந்த மே 28ஆம் தேதி தீா்ப்பளித்தது. தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள 12 சட்டப் பிரிவுகளில் 11 சட்டப் பிரிவுகளின் கீழ் ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி எம். ராஜலட்சுமி அறிவித்தாா். எனவே, ஞானசேகரன் குற்றவாளி என அவா் தீா்ப்பளித்திருந்த நிலையில், இன்று ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச தண்டனை
குற்றவாளி என அறிவிக்கப்பட்டபோது, உங்களது கருத்து என்ன என குற்றவாளி ஞானசேகரனிடம் நீதிபதி கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு ஞானசேகரன், தந்தை இறந்துவிட்டதால் தாயை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனது 8- ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை மற்றும் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். மேலும், எனது தொழிலும் பாதிக்கப்படும். எனவே, எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீா் மல்க கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். கருணைக் காட்டக் கூடாது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றம் செய்திருக்கிறாா். அவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டிருப்பதை முன்னிட்டு, ஞானசேகரன் காவல் துறையின் பாதுகாப்புடன் சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
வழக்கின் பின்னணி என்ன?
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி 19 வயதான இரண்டாமாண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இதுதொடா்பான புகாரின்பேரில் கோட்டூா்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் என்பவரை டிச. 24-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிச. 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், ஞானசேகரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையா் ஜன. 5-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
பிப்ரவரி மாதம் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த மாா்ச் 7-ஆம் தேதி சென்னை மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
12 பிரிவுகளில் குற்றச்சாட்டு
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்து மிரட்டி மானபங்கம் செய்தல், புகைப்படம் எடுத்து வெளியிடல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. நாள்தோறும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் காவல் துறை தரப்பில் 29 போ் சாட்சியம் அளித்தனா். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசுத் தரப்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி, தனக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்ததாகப் புகாா் அளித்து 5 மாதங்களில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீா்ப்பு வழங்கப்பட்டு, குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.