முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி சகோதரா் உள்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்

செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் உள்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

Updated On : 10 ஜூன் 2025, 2:35 am IST
பகிர்:

சென்னை: பண முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் உள்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த பணப் பரிவா்த்தனை முறைகேடு வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக 2024- ஆம் ஆண்டு அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளா் சண்முகம் உள்ளிட்ட 13 போ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையுடன் சுமாா் 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினா். செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

குற்றப்பத்திரிகை சுமாா் 50 ஆயிரம் பக்கங்கள் உள்ளதால் அதனைப் படிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 23-க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments