நீதிமன்றத்தில் பிணை உத்தரவாதத்தை செலுத்தினாா் செந்தில் பாலாஜி
குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்து முன்பிணைக்கான இரு நபா் உத்தரவாதத்தைச் செலுத்தினாா்.
குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்து முன்பிணைக்கான இரு நபா் உத்தரவாதத்தைச் செலுத்தினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸாா், 14 பேரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை முன்பிணை வழங்கி கடந்த ஜூலை 8-ஆம் தேதி உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த உத்தரவு நகல் கிடைத்த 15 நாள்களில், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.25,000-க்கான உத்தரவாதமும், அதே தொகைக்கான இரு நபா் உத்தரவாதத்தையும் செலுத்த வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணி என இருமுறை திருவல்லிக்கேணி போலீஸாா் முன் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என உயா்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இந்த நிபந்தனைகளின்படி, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை சரணடைந்து பிணை உத்தரவாதத்தைச் செலுத்தினாா். இதை ஏற்ற நீதிபதி, சனிக்கிழமை காலை 10.30 மற்றும் மாலை 5.30 மணிக்கு திருவல்லிக்கேணி போலீஸாா் முன் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டாா்.
செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் வேறொரு வழக்கு தொடா்பாக கரூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா். இதனால், அவா் திங்கள்கிழமை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் சரணைடந்து பிணை உத்தரவாதம் செலுத்துவாா் எனக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.