முகப்பு
தமிழ்நாடு

’நேற்று முளைத்த காளான்’: விஜய்யை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு!

தவெக தலைவர் விஜய்யை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்திருப்பது பற்றி...

Updated On : 26 மே, 2025 at 10:09 AM
அமைச்சர் சேகர் பாபு(கோப்புப்படம்)
பகிர்:

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் தில்லி பயணத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விமர்சித்திருந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதை விமர்சித்து ஞாயிற்றுக்கிழமை விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், ”டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது. எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்ததுதான் நீதி ஆயோக் கூட்டம்.

Advertisement

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விடுவதும், ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்குவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், திடீரென இந்த வருடம் மட்டும் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இது, மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல. தன்னுடைய குடும்ப வாரிசு நிதியைக் காப்பாற்ற மட்டுமே என்பது சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர் பாபு, விஜய்யின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கல்வி நிதியை விடுவிக்கக் கோரி நீதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மற்ற இயங்களைப் போல சுற்றிவந்து பின்புற வாசல் வழியாக பாஜகவுடன் கள்ள உறவு வைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. நேற்று முளைத்த காளான்களுக்கெல்லாம் இன்று நாங்கள் பதில் சொல்ல தயாராக இல்லை.

களத்துக்கு வரட்டும், அவர்கள் அடிப்பதைவிட 100 மடங்கு வேகமாக ஒரே அடியில் அடிக்க திமுக தயாராக இருக்கின்றது. ஏதோ ஒரு நாள் அறிக்கை, ரோட் ஷோ செல்பவர் அல்ல எங்கள் முதல்வர். நாள்தோறும் மக்களோடு மக்களாக பயணிக்கும் முதல்வருக்கு 2026 இல் மகுடம் சூட்ட தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments