முகப்பு
தமிழ்நாடு

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

ஒசூரில் பெண் தொழிலாளர்களின் குளியறையில் ரகசிய கேமரா இருப்பதாக விடியவிடிய போராட்டம்; வடமாநில இளம்பெண் கைது

Updated On : 5 நவம்பர், 2025 at 5:24 AM
விடிய விடிய போராட்டம் நடத்திய பெண் தொழிலாளர்கள்
பகிர்:

ஒசூரில் டாடா நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் விடுதி குளியறையில் ரகசிய கேமரா வைத்ததாக வடமாநில இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

ஒசூரில் உள்ள டாடா நிறுவனத்தில் பணியாற்றிவரும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட விடுதியில் குளியலறையில் ரகசிய கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தது பெண் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளம்பெண் தொழிலாளர்கள் விடுதி முன்பு செவ்வாய்க்கிழமை மாலை (நவ. 4) தொடங்கி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் சார் ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சமாதானம் செய்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை,

இதனையடுத்து ரகசிய கேமரா வைத்ததாக வடமாநில பெண் தொழிலாளியான நீலா குமாரி (23) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட விடியோவை தனது ஆண்நண்பருக்கு நீலா குமாரி அனுப்பியதாகவும், அது சமூக வலைத்தளத்தில் பரவியதும் தெரிய வந்தது. இதனடிப்படையில்தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, விடுதியின் குளியலறைகளில் ரகசிய கேமராக்கள் ஏதேனும் இருக்கிறதா என மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனை நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் ரகசிய கேமரா அமைத்தவரை கைது செய்ய வேண்டும், விடுதியில் தங்களை கொடுமைப்படுத்தும் வார்டன்களை மாற்ற வேண்டும், வேறு ஏதேனும் இடங்களில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதா என விடுதி முழுவதும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதிகாலை நேரத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உத்தனப்பள்ளி ராயக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் நிறுவன பேருந்து மூலம் அழைத்துச் சென்று விடுதியில் விட்டுள்ளனர்.

போலீசார் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என கூறியதன் அடிப்படையில், அதிகாலை 5 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

ரகசிய கேமரா வைத்த வடமாநில பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போராட்டம் குறித்து அறிந்த பெண் தொழிலாளிகளின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு இன்று காலை வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: நான்கரை மணிநேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி

summary

Hosur: Hidden camera in female workers' bathroom; Young woman from Northern State arrested

முழு கட்டுரையைப் படிக்க →