சின்னமனூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை
சின்னமனூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக...
உத்தமபாளையம்: சின்னமனூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் ஜக்கம்மா கோயில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (60). இவர் சீலையம்பட்டி அருகே தனது வயலில் நெல் அறுவடை செய்து கீழப்பூலாந்தபுரம் விலக்கு பகுதியில் குவித்து வைத்திருந்திருக்கிறார்.
இதனை அடுத்து, இன்று(நவ. 11) அதிகாலை இரண்டு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு நபர்கள் பால்பாண்டியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அவரது உறவினர்கள் கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போடி காவல்துறை கண்காணிப்பாளர் சுனில், சின்னமனூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இந்தச் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் படுகொலை சம்பந்தமாக சின்னமனூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.