தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
ஆனால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்யாமல் தொடர்ந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
கரூர் தவெக கூட்ட நெரிசல் பலி குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார்.
அந்த கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில், அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேசினார்.
அமைச்சர் சிவசங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி பேரவைத் தலைவர் அப்பாவு இருக்கை முன்பு அமர்ந்து இபிஎஸ், அதிமுக எம்எல்ஏக்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
இருக்கையில் அமர்ந்து நீக்க வேண்டிய கருத்துகளை கூறுங்கள் நடவடிக்கை மேற்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அமளியை தொடர்ந்தனர்.
இதையடுத்து அவைக் காவலர்களை பேரவைத் தலைவர் அப்பாவு அழைத்த நிலையில், அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி இபிஎஸ் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பேரவையில் அமர்ந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இபிஎஸ் பேசுவதற்கு முன்னதாகவே அவையைவிட்டு வெளியேறிவிட்டார்.
மேலும், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரூர் கூட்டநெரிசல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்பதற்காக அவையில் அமர்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.