வங்கக் கடலில் அக்.24(நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக நேற்று (22-10-2025) தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (23-10-2025) காலை 05.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து வட தமிழக உட் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை 08.30 மணியளவில் தெற்கு உள் கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
நேற்று (22-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வட மேற்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். நேற்று (22-10-2025) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று (23-10-2025) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 24-10-2025 அன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்க்கடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.
புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகுமா அல்லது வலுவிழக்குமா என்பதை அதன் நகர்வை பொருத்துதான் கணிக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: பிகார் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.