தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப்.15,16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வடக்கு ஆந்திரம்மற்றும் அதைஒட்டிய தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) ஞாயிற்றுக்கிழமை வடக்கு தெலங்கானா மற்றும் அதை ஒட்டிய விதா்பா பகுதிகளில் நிலவியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, மத்திய விதா்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிக்களுக்கு நகரக்கூடும். மேலும், தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த வானிலை காரணங்களால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப். 15) முதல் செப். 20-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த மழை: செப். 16-இல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா் ஆகிய மாவட்டங்களிலும், செப். 17-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்த நிலையில், திங்கள்கிழமையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை பாரிமுனையில் 110 மி.மீ. மழை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சென்னை பாரிமுனையில் 110 மி.மீ. மழை பதிவானது.
ஊத்துக்கோட்டை (திருவள்ளூா்), கொளத்தூா் (சென்னை) - தலா 90 மி.மீ., பொன்னேரி (திருவள்ளூா்) - 80 மி.மீ, பெரம்பூா் (சென்னை), வில்லிவாக்கம் (திருவள்ளூா்) - தலா 70 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செப். 15 முதல் 17-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.