முகப்பு
தமிழ்நாடு

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட்! அண்ணாமலை

கேரள அரசின் ஐயப்ப பக்தர்கள் மாநாடு குறித்து அண்ணாமலை கருத்து...

Updated On : 23 செப்டம்பர் 2025, 11:03 am IST
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை - X| K.Annamalai
பகிர்:

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட் செய்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பம்பா நதிக் கரையில், ஐயப்ப பக்தர்களின் சர்வதேச மாநாட்டை கேரள அரசு கடந்த வாரம் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, கேரள மாநிலம், பந்தளத்தில் பாஜக சார்பில் சபரிமலை சமரக்ஷண சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடக்க விழாவில், தமிழகத்தில் இருந்து அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார்.

Advertisement

அப்போது, சபரிமலையை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட் அடிப்பதாக விமர்சித்திருந்தார். மேலும், கேரளம் மற்றும் தமிழக முதல்வர்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசும்போது, கேரள அரசின் ஐயப்ப பக்தர்கள் மாநாடு குறித்து விமர்சனத்தை முன்வைத்தார்.

அண்ணாமலை பேசியதாவது:

”கேரளத்தில் தொடர்ந்து பாஜக தொண்டர்களை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜகவினரை தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 2024 -25 ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 421 கோடி காணிக்கையாக பக்தர்கள் கொடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக, கடந்த 2 ஆண்டுகளிலும் தலா ரூ. 350 கோடிக்கு மேல் காணிக்கை கிடைத்துள்ளது. ஆனால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு சபரிமலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பெயர் பிக்-பாக்கெட் இல்லாமல் வேறென்ன?

தமிழகத்தில் இருந்து இரண்டு அமைச்சர்கள் மாநாட்டுக்குச் சென்றனர். சபரிமலையில் தமிழக அரசுக்கு 5 ஏக்கர் ஒதுக்குமாறு அமைச்சர் சேகர் பாபு கோரிக்கை வைக்கிறார். தமிழகத்தில் காணாமல் போன 1.25 லட்சம் கோயில் நிலத்தை மீட்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மேடையில் முதலில் பேச அழைக்கவில்லை என்று சண்டை போட்டுள்ளார். சநாதனத்துக்கு எதிராக பேசும் மு.க. ஸ்டாலினை எதற்காக பினராயி விஜயன் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும். அவர் போகாமல் இரண்டு அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார்.

பினராயி விஜயன் அடிப்படையில் கடவுளை நம்பாதவர். கடவுள் இல்லை என்பவர். அவர் ஏன் ஐயப்பனுக்கு மாநாடு நடத்த வேண்டும்? அரசியல் ஆதாயத்துக்காக இதை செய்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

summary

Kerala government pick-pockets Ayyappa - Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.