ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்
கோவை பிரசாரத்தின்போது ப. சிதம்பரம் பேசியது குறித்து....
ஆமை புகுந்த வீடு போல பாஜக புகுந்த நாடு உருப்படாது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று (ஏப். 14) விமர்சித்தார்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று (ஏப். 14) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் ப. சிதம்பரம் பேசியதாவது:
Advertisement
''ஐந்தாண்டு கால திராவிட முன்னேற்ற கழக ஆட்சி என்பதை கடந்த 20 ஆண்டு காலத்தை பார்த்தால் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடைபெற்றது. பத்தாண்டு திமுக ஆட்சி நடைபெற்றது. இந்த இருபது ஆண்டு காலம் கழித்து தற்போது யாரை தேர்ந்தெடுப்பது என்பது தான் கேள்வியாக உள்ளது.
இந்த தேர்தல் நான்கு முனை ஐந்துமுனை போட்டி எல்லாம் கிடையாது இருமுனை போட்டி தான் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, மற்றொன்று அதிமுக என்ற பாஜக என்கின்ற இந்துத்துவா கட்சி.
அதிமுகவை அமமுக பழித்துக் கொண்டிருந்தது. ஒரு ஆண்டு காலத்திற்கு முன்பு அதிமுக பாஜகவுடன் இணையவே மாட்டோம் என்று கூறியது. ஆனால், தற்பொழுது அனைவரும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது அதுபோல, பாஜக புகுந்த நாடு உருப்படாது. பாஜகவின் வேலை என்பது இந்தி மற்றும் இந்துத்துவாவை புகுத்துவது தான். சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக ஆக்கப்படுகிறது. இது இந்த திணிப்பு இல்லையா?
தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு தருகின்ற நிதியை காட்டிலும் 17 மடங்கு அதிகமான நிதியை சமஸ்கிருத மொழிக்கு வழங்குகிறது. அதே போல் இந்தி மொழிக்கு தருவது பல நூறு மடங்கு.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான். ஆனால், பாஜக அரசு தற்போது திருத்தம் செய்து கொண்டு வருவது என்பது ஒரு மோசடி.
பழனிசாமியை பொம்மை போன்று, பின்னால் இருந்து அமித் ஷா இயக்கி வருகிறார். இது மோசமான அடிமைத்தனம். நாடே பற்றி எரியக்கூடிய விஷயங்களுக்கு கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்காமல் அடிமை சாசனத்தை எழுதி கொடுத்து விட்டார்
நமக்கும் (தேசிய முற்போக்குக் கூட்டணி) அதிமுகவிற்கும் போட்டி என்பது போன்று தோன்றும்; ஆனால், உண்மையில் நமக்கும் பாஜகவிற்கும் தான் போட்டி'' என சிதம்பரம் குறிப்பிட்டார்.