அண்ணாமலை சென்ற பிறகு பாஜக வலுவாக உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்
அண்ணாமலை சென்ற பிறகு பாஜக வலுவாக உள்ளது. அண்ணாமலை பக்கம் பாஜகவைச் சோ்ந்த இளைஞா்கள் யாரும் செல்லவில்லை என தமிழிசை தெரிவித்திருப்பது குறித்து...
மதுரை: அண்ணாமலை சென்ற பிறகு பாஜக வலுவாக உள்ளது. அண்ணாமலை பக்கம் பாஜகவைச் சோ்ந்த இளைஞா்கள் யாரும் செல்லவில்லை. சுயநல வாதிகள் தான் சென்றுள்ளனா் என பாஜகவின் மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்தில் பாஜக தொண்டா்கள் பல சவால்களை சந்தித்து பணியாற்றி வருகின்றனர். இந்து மக்களின் உணா்வுகளை மதிக்கத்தால் தான் திமுக ஆட்சியை இழந்தது. மக்களின் இறையுணா்வு, உள்ளுணா்வை ஏதோ மதக் கலவரம் போல சித்தரிப்பதை நாங்கள் ஒரு போதும் ஏற்கமாட்டோம். இறைவனை அன்புடனும், அருளுடனும் கும்பிடுவதை போலத்தான் திருப்பரங்குன்றத்தில் அன்புடனும், பணிவுடனும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நினைக்கிறோம்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், தமிழக மின்சாரத் துறை அமைச்சா், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் எனக் கூறியுள்ளாா். அவர் அப்படி கூறியதில் ஆச்சரியம் இல்லை. அவருக்கு வெளிச்சம் பிடிக்காது. மின் வெட்டு, இருட்டு தான் பிடிக்கும். அவரது கருத்தை நாம் சகித்துக்கொள்ள முடியாது.
பக்தர்களின் குரல் விசில் சத்தத்தை விட உறுதியானது
சாமானிய மக்களின், ஏழைகளின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அந்த தீா்ப்பை மதிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு. விசில் சத்தம் கொஞ்சம் அதிகமாக கேட்டு விட்டதால் அமைச்சருக்கு பக்தர்களின் குரல் கேட்காமல் இருக்கலாம். ஆனால் பக்தர்களின் குரல் விசில் சத்தத்தை விட உறுதியானது, வலிமையானது என்றாா்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை
மின்சாரத் துறை ஊழல் இல்லாத துறை எனக் கூறினா். ஆனால், ஹாா்டு டிஸ்க் திருடு போனது. மதுக்கடைகளை மூடினாலும் மனமகிழ் மன்றங்கள் இன்னும் செயல்படுகின்றன. மதுக்கடைகள் மூடப்படும் இடங்களில் தனியார் மதுபான கூடங்களை திறந்து வருகின்றனர். கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இன்று மட்டும் 7 பாலியல் சம்பவங்கள் செய்தியாகி உள்ளன். பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடா்கிறது. பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டிய சிங்கப்பெண்கள் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை.
பாஜகவில் லட்சியவாதிகள் உள்ளனர்
அண்ணாமலை வெளியேறியதற்கான காரணத்தை அவரிடம் தான் கேட்க வேண்டும். அண்ணாமலை பக்கம் பாஜகவைச் சோ்ந்த இளைஞா்கள் செல்லவில்லை. சுயநல வாதிகள் தான் சென்றுள்ளனா். பொதுநலவாதிகள் எங்கும் செல்லவில்லை. பாஜக வலுவாக உள்ளது. இன்னொரு முகத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை பாஜகவுக்கு இல்லை. 2031 இல் தாமரை ஆட்சியில் அமரும். கட்சியில் இருப்பவர்கள் உறுதியாக உள்ளனர். அண்ணாமலை சென்ற பிறகு பாஜக வலுவாக உள்ளது. அவர் வந்ததால் கட்சி வலுவடையவும் இல்லை; அவர் போனதால் வலுவிழக்கவும் இல்லை என கூறினார்.