நிதீஷ் குமார் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு! அரவிந்த் கேஜரிவால்
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் செய்தது குறித்து...
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், பிகாரில் நிதீஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும் என தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (ஏப். 20) தெரிவித்தார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்காக தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (ஏப். 20) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின்போது அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:
Advertisement
''தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எனது நண்பர். எனது சகோதரர். தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தவர் மு.க. ஸ்டாலின்.
தில்லியில் எங்கள் பள்ளி மற்றும் மருத்துவமனைகளை பார்வையிட்டு இங்கேயும் அத்தகைய உள்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தியவர் மு.க. ஸ்டாலின். எந்தவித ஈகோவும் இல்லாதவர். அதனால்தான், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன்.
அதிமுக தற்போது பாஜகவின் பிடியில் உள்ளது. அதிமுகவை கைப்பற்ற பாஜக விரும்புகிறது. அதனை ஆட்டிப்படைக்கிறது. பாஜகவுடன் இணைந்ததால், பிகாரில் முதல்வர் நிதீஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும்.
மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்காக போராடுகிறார். மோடி அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஸ்டாலினின் எதிர்ப்பை நாடு முழுவதுமே கண்டது. அதன் எதிரொலியால் அந்த மசோதாவே தோல்வி அடைந்தது. நல்ல திட்டங்கள் தொடர தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும்'' என அரவிந்த் கேஜரிவால் பேசினார்.