யாருக்கு வாக்களித்தீர்கள்? கண்டறிய இயந்திரங்களில் வாசனைத் திரவியமா? தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்களில் வாசனைத் திரவியங்கள் பூசப்படுவதாக எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை
தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்களில் வாசனைத் திரவியங்கள் பூசப்படுவதாக எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை (ஏப். 23) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிகள் மீறல் நடக்காமலிருப்பதையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் நாளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்களில் வாசனைத் திரவியம் பூசுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்துள்ளது.
Advertisement
பொத்தான்களில் வாசனைத் திரவியம் பூசுவதன் மூலம், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகப் புகார்.
இந்தப் புகாரையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்களில் வாசனைத் திரவியம் தடவப்பட்டிருந்தால், அது வாக்கு ரகசியத்தை பாதிக்கும் செயல் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும், வாசனைத் திரவியங்களைப் பூசுவதால், இயந்திரங்களைப் சிதைக்கும் செயலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, தேவைப்பட்டால் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, புகாரையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டிருக்கிறதா என்பதை தீவிரமாக பரிசோதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.