2 மணி நேர விடியோ துண்டிப்பு... சிசிடிவி கேமராவில் தவறான நேரம்! ஆட்சியர் நேரில் ஆய்வு!
வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக....
சிசிடிவி காட்சியின் நேரம் மாறி 2 மணி நேரம் பின்னோக்கி ஓடுவதாக விடியோ வெளியான நிலையில், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல். ஆர். ஜி. அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு உள்ள நிலையில், இன்று(ஏப். 25) அதிகாலை 4 மணி முதல் சிசிடிவி காட்சியின் நேரம் மாறி 2 மணி நேரம் பின்னோக்கி ஓடுவதாக விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
Advertisement
இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் இரண்டு மணி நேரம் இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கேமராக்களும் வேலை செய்யவில்லை எனவும் பாஜக மற்றும் தவெக முகவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போது அனைத்தும் சரியாக இருந்த நிலையில் தற்போது தொழில்நுட்பக் கோளாறுக் காரணமாக நேரம் மட்டும் இரண்டு மணி நேரம் பின்னோக்கி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மற்ற கட்சியினர் கூறுகையில், ”சிசிடிவி கேமராக்கள் நிறுத்தப்படாமல் இரண்டு மணி நேரம் பின்னோக்கி செல்லாது எனவும் இரண்டு மணி நேரம் கேமராக்கள் துண்டிக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை முறைப்படி தெளிவுபடுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.