த்ரிஷா என்ன பிரதமரா? - திமுக கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளது பற்றி...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து பேசிய திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி, த்ரிஷா என்ன பிரதமரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாகத் தொடரப்பட்ட புகார்களில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து உருப்படியா ஏதாவது சாதித்து இருக்கிறாரா? திமுக ஆட்சியில் வைத்த பெயரையெல்லாம் மாற்றினார். இன்றுதான் ஒரு எம்.எல்.ஏ சிறையிலிருந்து வெளியாகிறார். அதற்குள் இவர் எதிர்க்கட்சித் தலைவரையே உள்ளே அனுப்புகிறார். எனக்கு எழும் சந்தேகம் என்னவென்றால், சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டால் அனைவரையும் கைது செய்து வைத்துவிட்டு ஆளில்லாத திடலில் பந்து விளையாடலாம் என்று ஆசைப்படுகிறாரா என்பதுதான். அவருடைய எண்ணம் ஈடேறாது. திமுக அதற்குரிய வியூகங்களை வகுக்கும். சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் சந்திப்போம்.
இந்த நிகழ்வு குறித்து நாளை தவெக ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறது. அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறட்டும். அதன்பிறகு, திமுககாரர்களும் அனைத்து மேடையிலும் அந்த தனிப்பட்ட நபர் யார்? அவருக்கும் நாட்டுக்கும் என்ன தொடர்பு என்பதையெல்லாம் பேசுவார்கள். எங்களிடமும் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். நாங்கள் பேச ஆரம்பித்தால் விஜய் தாங்கமாட்டார்.
இதைவிட பெரிய போராட்டங்களையெல்லாம் சட்டரீதியாக நடத்தி வெற்றிபெற்ற கட்சிதான் திமுக. விவசாயிகள் பலியாகிறார்கள். அதைப்பற்றி எந்த போராட்டமும் நடைபெறவில்லை. மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த வழியில்லாத ஒரு ஆட்சி. யாரோ ஒரு நடிகைக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி பேசுவார்கள் என்றால், அதை நாங்கள் துயிலுரித்துக் காட்டுவோம்.
கூட்டத்தில் இருந்தவர்கள் த்ரிஷா வீட்டில் மட்டும் தண்ணீர் வருமா? என்று கேட்டபோது, அங்கு மட்டும் வரும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அது என்ன உலகமகா தவறா? ஒரு வாதத்துக்காகக் கேட்கிறேன். அப்படியே த்ரிஷா பற்றி பேசினால் மட்டும் உடனடியாக கைது செய்யவேண்டிய தேவை என்ன? அவர் என்ன பிரதமரா? அல்லது முதல்வரா?
திமுககாரர்கள் மேடையில் பேச ஆரம்பித்தால் பல விஷயங்கள் வெளியில் வரும் என்று ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
Condemning the arrest of DMK Youth Wing Secretary Udhayanidhi Stalin, DMK Organizing Secretary R.S. Bharathi questioned, "Is Trisha the Prime Minister?"
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.