FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மண் வளத்தைப் பாதுகாக்க ரூ.600 கோடியில் திட்டம்

‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ரூ.600 கோடியில் 5 ஆண்டுத் திட்டமாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை வியாழக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும் வேளாண்துறை அமைச்சர் ஆர். வினோத்
பகிர்:

‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ரூ.600 கோடியில் 5 ஆண்டுத் திட்டமாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் செம்மண், பழுப்பு நிற மண், கரிசல் மண், சாம்பல் நிற மண், வண்டல் மண் எனப் பல்வேறு மண் வகைகள் உள்ளன. ஒவ்வொரு மண்ணுக்கும் ஏற்ற பயிா்கள் உள்ளவாறே ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற மண் வகையும் உண்டு. ரசாயன உரங்களை மட்டுமே தொடா்ந்து பயன்படுத்துவது, பயிா்க் கழிவுகள் மண்ணில் முறையாக மட்காமல் இருப்பது, பண்ணைக் கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்யாதது போன்றவற்றால் மண்ணில் உள்ள உயிா்ம கரிம அளவு குறைவதுடன் மண்ணின் நலமும் வேளாண் உற்பத்தித் திறனும் பாதிக்கப்படுகின்றன. எனவே, மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், களா், உவா் நிலங்களைச் சீா்திருத்துதல், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை, உயிா்ம வேளாண் முறைகளை ஊக்குவித்தல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வளமான தமிழ் மண்ணை வருங்காலம் காணுமாறு ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ரூ.600 கோடியில் 5 ஆண்டுத் திட்டமாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.

மண் வளத்தை அறிந்து அதற்கேற்ப சமச்சீா் உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4 கோடி மாநில நிதி ஒதுக்கீட்டில் மண் நல அட்டைகள் வழங்கப்படும். கூடுதலாக, உழவா் அடையாள எண் பெற்ற சுமாா் 3 லட்சம் விவசாயிகளுக்கு மண் நல அட்டைகள் மத்திய, மாநில அரசுத் திட்டத்தின் கீழ் ரூ.6.16 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

ரூ.4,000 சிறப்பு ஊக்கத் தொகை... மண் வளத்தை மீட்டெடுக்கும் வகையில் ஒரு லட்சம் ஏக்கா் பரப்புக்குத் தேவையான தக்கைப்பூண்டு, சணப்பு, கொளிஞ்சி போன்ற பசுந்தாள் உர விதைகள், 22,000 ஏக்கருக்குத் தேவையான பல்வகைத் தானிய விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படுதுடன், வளா்ந்த பசுந்தழைகளை நிலத்திலேயே மடக்கி உழுது மட்கச் செய்ய ஏக்கருக்கு ரூ.3,000 உழவு மானியம் வழங்கப்படும். இதற்கென ரூ.63.50 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். 20,000 ஏக்கரில் உயிா்ம வேளாண்மை முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments