தமிழக வேளாண் பட்ஜெட்! வெள்ளைத் தங்கம் உற்பத்தியை ஊக்குவிக்க இயக்கம்!
தமிழக வேளாண் பட்ஜெட்டில் வெள்ளைத் தங்கம் உற்பத்தியை ஊக்குவிக்க இயக்கம் கொண்டு வரப்படும் என அறிவிப்பு..
தமிழ்நாட்டில் வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் உருவாக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் வினோத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதில், பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் பற்றிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்
இந்தியாவின் மொத்த நூற்புத் திறனில் 46 சதவீதம். விசைத்தறித் திறனில் 22 சதவீதம், கைத்தறித் திறனில் 12 சதவீதம், பருத்தி பின்னலாடை உற்பத்தியில் 70 சதவீதம் தமிழ்நாட்டில் அமைந்து, நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றி வருகிறது.
'வெள்ளைத் தங்கம்' என்றும், 'King of Fibre' என்றும் அழைக்கப்படும் பருத்தி, தமிழ்நாட்டில் சராசரியாக 3 இலட்சத்து 14 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் பொதிகள் (Bales) உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதனால், தமிழ்நாட்டில் செயல்படும் பருத்தி நூற்பாலைகளின் தேவையான 120 இலட்சம் பொதிகளில், 98 சதவீதம் பிற மாநிலங்களில் இருந்தே பெறப்படுகிறது. எனவே, பருத்தி உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில், உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களான அடர் நடவு, நெருக்க நடவு, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, நுனிக்கிள்ளுதல் ஆகியவற்றோடு வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் மிக நீண்ட இழை பருத்தி சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி ஆகியவற்றையும் ஊக்குவிக்க "பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்" 2026-27 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும்.
நடப்பாண்டில், 73 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் 27 கோடியே 21 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில், 40 ஆயிரம் பருத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்
தமிழ்நாட்டில், கோழித்தீவனம் மற்றும் எத்தனால் தொழிற்சாலைகளில் "மக்காச்சோளம்" முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் மக்காச்சோளத்தின் தேவையை நிறைவு செய்து, விவசாயிகள் நல்ல வருமானம் ஈட்டிடும் வகையில், 2026 27 ஆம் ஆண்டில் "மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்", 3 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு இலட்சத்து 39 ஆயிரம் விவசாயிகள் பயனடையும் வகையில் 36 கோடி ரூபாய் மத்திய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.