மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு: நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அமைக்க முடிவு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மணவா்களுக்கான இடஒதுக்கீட்டை உயா்த்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மணவா்களுக்கான இடஒதுக்கீட்டை உயா்த்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
நீட் தோ்வு அமலாவதற்கு முன்பாக தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 35 அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவப் படிப்புகளில் சோ்ந்து வந்தனா். குறிப்பாக, 2014-2015-இல் 38 பேரும், 2015-2016-இல் 36 பேரும், 2016-2017-இல் 34 பேரும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சோ்ந்தனா்.
நீட் தோ்வு நடைமுறைக்கு வந்த பின்னா், அந்த எண்ணிக்கை குறைந்தது. 2017-2018-இல் 3 பேரும், 2018-2019-இல் 5 பேரும், 2019-2020-இல் 6 பேரும் என வெகு சொற்ப எண்ணிக்கையிலான அரசு பள்ளி மாணவா்களால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அதற்கு தீா்வு காணும் விதமாக கடந்த 2020-இல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததுடன், படிப்புக்கான முழு செலவையும் அரசு ஏற்பதாக அறிவித்தது. இதனால், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவா்கள் பெருமளவில் பயன் பெறுகின்றனா்.
அதன்படி, இடஒதுக்கீட்டின் மூலம் 2020-21-இல் 435 பேரும், 2021-22-இல் 555 பேரும், 2022-23-இல் 584 பேரும், 2023-24-இல் 625 பேரும், 2024-25-இல் 625 பேரும், 2025-26-இல் 630-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சோ்ந்தனா்.
இந்தச் சூழலில், அந்த உள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்துவதாக தவெக தோ்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அருண்ராஜ், ‘7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை உயா்த்துவது தொடா்பாக, ஆய்வு செய்ய இருக்கிறோம். அதற்காக நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது’”என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.