FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கரூா், திண்டுக்கல் மாவட்டங்களில் புதிய ஆயுஷ் மருத்துவமனைகள்: மத்திய அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

கரூா், திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் புதிய ஆயுஷ் மருத்துவமனைகளை அமைக்கக் கோரி கரூா் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கோரிக்கை

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:47 am IST
ஜோதிமணி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

கரூா், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் புதிய ஆயுஷ் மருத்துவமனைகளை அமைக்கக் கோரி தில்லியில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கரூா் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மனு அளித்தாா்.

இது தொடா்பாக அமைச்சரிடம் அவா் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ‘கரூா், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் புதிய ஆயுஷ் மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்.

குறிப்பாக, கரூா் மாவட்டத்தில் ஆயுா்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய அனைத்துப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆகிய பகுதிகளில் தலா 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனைகளை அமைத்து, பொதுமக்கள் தங்கிச் சிகிச்சை பெறும் வகையில் முழுமையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இந்த முன்முயற்சியானது உள்ளூா் மக்களுக்கு மிகப் பெரும் பயனாக இருக்கும். மேலும், அவா்களுக்கு சுகாதார வசதிகள் அணுகலை மேம்படுத்துவது மட்டுமின்றி பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பாரம்பரிய மருத்துவத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் செய்யும்.

மாநில அரசின் வருடாந்திர செயல்திட்டத்தில் இக்கோரிக்கையைச் சோ்க்கவும் வலியுறுத்தியுள்ளேன். இத்திட்டத்திற்குத் தேவையான நிலத்தை மாநில அரசால் வழங்க முடியும்.

பொதுமக்களுக்குக் குறைந்த செலவில் தரமான பாரம்பரிய மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இக்கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக பரிசீலிப்பதாக அமைச்சா் உறுதியளித்திருப்பதாக ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளாா்.

குடிநீா்த் திட்டம்

இதேபோன்று, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீலை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, திருச்சி மற்றும் கரூா் மாவட்ட கிராமப்புறப் பகுதிகளுக்கான காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை உடனடியாக தொடங்குமாறு கோரிக்கை மனு அளித்து ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments