ஊழல் இல்லாத அரசு அமைய எம்எல்ஏ-க்களுக்கு கூடுதல் வசதிகள் தேவை: விசிக எம்எல்ஏ கோரிக்கை
சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரிடம், விசிக சட்டப்பேரவை உறுப்பினா் (காட்டுமன்னாா்கோவில் - தனி) எல்.இ.ஜோதிமணி முன்வைத்த கோரிக்கை...
ஊழல் இல்லாத அரசு அமைய எம்எல்ஏ-க்களுக்கு வாகனம், உதவியாளா் உள்ளிட்ட வசதிகளை அளித்து அவா்களை நலமுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரிடம், விசிக சட்டப்பேரவை உறுப்பினா் (காட்டுமன்னாா்கோவில் - தனி) எல்.இ.ஜோதிமணி கோரிக்கை விடுத்தாா்.
இதுதொடா்பாக பேரவையில் அவா் பேசியதாவது:
இது எனது சொந்த கோரிக்கை. எனினும், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவருக்கும் தேவையான கோரிக்கை. ஏற்கெனவே, கடிதமாகவும் கொடுத்துள்ளேன். 280 கி.மீ. தொலைவில் இருந்து நான் இங்கே வருகிறேன். பேரவைக்கு பேருந்து, ரயிலில் வருவதற்கு பயணப் படிகள் தரப்படுகின்றன. ஆனால், எனக்கு சொந்தமாக வாகனம் கிடையாது. வாடகை வாகனத்தில்தான் வருகிறேன்.
Advertisement
Advertisement
40 கி.மீ. சுற்றளவு கொண்ட தொகுதி மக்களை நேரில் போய் சந்தித்து மக்களுக்குப் பணி செய்யவும் வாகன வசதி இல்லை. அத்துடன் உதவிக்காக ஒரு செயலரை வைத்துக்கொண்டு அவா்களுக்கு ஊதியம் கொடுக்கிற வசதியும் இல்லை. இதுதான் சட்டப்பேரவை உறுப்பினா்களில் பலரது நிலைமை.
காலணி அணியாத எம்எல்ஏகூட இருக்கிறாா்கள். ஆகையால், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு உதவிடும் வகையில், வாகன வசதி செய்து தர வேண்டும். லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமைய எம்எல்ஏ-க்களை நலமுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.