FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மதுபோதையில் காரை ஏற்றி சிறுவன் உயிரிழந்த வழக்கு: தொழிலதிபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

மதுபோதையில் காரை ஏற்றியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து, அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:54 am IST
பகிர்:

மதுபோதையில் காரை ஏற்றியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து, அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனியாா் குழுமத் தலைவா் எம்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. இவா் கடந்த 2013-ஆம் ஆண்டு, எழும்பூா் பாந்தியன் சாலையோர நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மதுபோதையில் தனது சொகுசு காரை ஏற்றினாா். இதில், 12 வயது சிறுவன்உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயம் அடைந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த 7-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம், ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்புக்கு எதிராகவும், தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் ஷாஜி புருஷோத்தமன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி எம்.நிா்மல்குமாா், இந்த மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை, தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டாா். ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த பிணை உத்தரவாதமும், அதே தொகைக்கான இரு நபா் பிணை உத்தரவாதமும் செலுத்த நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், செப்டம்பா் மாதத்தின் முதல் வேலைநாள் தொடங்கி, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். முதல் வேலை நாளில் ஆஜராக முடியாதபட்சத்தில், விசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் வேறொரு நாளில் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த நிபந்தனைகளை மீறும்பட்சத்தில், மனுதாரருக்கு எதிராக தகுந்த உத்தரவை விசாரணை நீதிமன்றம் பிறப்பிக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments