FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்றே தெரியவில்லை! உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:48 pm IST
உதயநிதி ஸ்டாலின் - DMK
பகிர்:

போதைப்பொருள் விவகாரத்தில் மாணவர்கள் மரணம் குறித்து அரசிடம் எந்த தெளிவான பதிலும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"கோவையில் மாணவர் அமுதன் 10 நாள்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்துகின்ற கும்பலைப் பற்றி காவல்துறையிடம் விவரங்களையெல்லாம் கூறியதற்காக காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? சரியான நடவடிக்கை எடுத்து, போதைப் பொருளைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

அந்த மாணவன் அமுதன் யார் மீது புகார் கொடுத்தாரோ, யார் போதைப்பொருள் கடத்துகிறார்கள், யார் விநியோகம் செய்கிறார்கள் என்று கூறினாரோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, அந்த போதைப்பொருள் விநியோகம் செய்கின்ற கும்பலை அழைத்து, 'இந்த அமுதன்தான் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுத்திருக்கிறார்' என்று கூறியதனால், அந்த போதைப் பொருள் விநியோகம் செய்யும் கும்பல் அமுதனை கிட்டத்தட்ட 20 பேரைக் கொண்ட ஒரு கும்பலாகச் சேர்ந்து அடித்து, 5 நாள்களுக்கு முன்பு படுகொலை செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, நேற்று முன்தினம் திருவொற்றியூரில் இதேபோல தனுஷ் என்ற மாணவர், 20 பேரைக் கொண்ட ஒரு கும்பலால் தாக்கப்பட்டு பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படித் தொடர்ந்து போதைப்பொருளால் இன்றைக்குப் பல்வேறு சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்பட்டு இருக்கின்றன. இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்று இந்த அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இன்றைக்கு நாம் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களும் சட்டமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசியிருக்கிறோம்.

ஆனால், இதற்கெல்லாம் எந்தவிதமான ஒரு சரியான பதிலும் இந்த அரசிடம் இல்லை. மாறாக எங்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். உங்களது ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று ஒரு தெளிவான விளக்கம் இல்லாமல், எங்கள் மீது மீண்டும் பழியைப் போடுகின்ற வழக்கத்தையே இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி, நான் பலமுறை இந்த மூன்று மாதங்களாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே சரியாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், இந்த அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலையே சொல்ல மறுக்கிறார்கள்.

இன்றைக்கு சட்டம் - ஒழுங்கைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம், போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவே இல்லை. இதையெல்லாம் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

எனினும் மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்துகொள்வோம்.

நாங்கள் முறையான பதில் வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதற்கான அமைச்சர்தான் வரவில்லையே? அமைச்சர்தானே எழுந்து பதில் சொல்ல வேண்டும்? சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.

விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற காணொலி எப்போது வெளியே வந்தது? ஒரு மாதத்திற்கு முன்னால் வந்தது. அப்படி காணொலி வந்தால், வந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியென்றால் இந்த அரசுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? அவரை அழைத்து விசாரித்தார்களா? அப்படியென்றால், அந்த அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா, அது போதைப் பொருள்தான் என்று ஒப்புக்கொள்கிறாரா?

எனவே இந்த அரசு அவரை அழைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்களுடைய அரசாக இருந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம். ஆனால் இந்த வீடியோ வெளிவந்ததே இப்போதுதான்" என்றார்.

summary

It is not even known who the minister for which department is: Udhayanidhi Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments