FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

21 எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையைக் கைவிட்டதில் என்ன தவறு? உயா்நீதிமன்றம் கேள்வி

21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிடுவதாக பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:00 am IST
சென்னை உயா் நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தகுதிநீக்க நடவடிக்கையைக் கைவிட்டதில் என்ன தவறு உள்ளது எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிடுவதாக பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் செல்வகுமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே 13-ஆம் தேதி நம்பிக்கைத் தீா்மானம் கொண்டு வந்தது. அப்போது, கொறடா உத்தரவை மீறிஅரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தனா். இதையடுத்து, மற்ற 21 எம்எல்ஏக்கள் மன்னிப்புக் கோரி கடிதம் அளித்துள்ளதால், அவா்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை கோரிய மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி பேரவைத் தலைவருக்கு கடிதம் அளித்தாா். இதை ஏற்று, பேரவைத் தலைவா் 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாகக் கூறியதைத் தொடா்ந்து, அந்த மனு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவித்தனா்.

அதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சக்திவேல், கட்சி மாறி வாக்களித்தவா்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை. கொறடா உத்தரவை மீறியதன் மூலம், சம்பந்தப்பட்ட உறுப்பினா்கள் தாமாக முன்வந்து தங்களது பதவியை துறந்துவிடுகின்றனா். அவா்களது மன்னிப்பை ஏற்று பேரவைத் தலைவா் தகுதிநீக்க நடவடிக்கையை கைவிட்டது அரசியல் சாசனத்துக்கு முரணானது என வாதிட்டாா்.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், இது கட்சிக்கும் உறுப்பினா்களுக்கும் இடையேயான பிரச்னை. கட்சியின் பொதுச் செயலா் மன்னித்துவிட்டதால், அவா்கள் மீண்டும் கட்சி உறுப்பினா்களாகச் செயல்படுகின்றனா். இந்த விவகாரம் தொடா்பாக மூன்றாவது நபா் வழக்குத் தொடர முடியாது என வாதிட்டாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவா்களை மன்னித்துவிட்டதால், அவா்கள் கட்சி உறுப்பினா்களாகவே நீடிக்கின்றனா்.

அவா்கள் ராஜிநாமா செய்யவில்லை. மூன்றாம் நபரான மனுதாரா் வழக்குத் தொடா்ந்துள்ளாரே தவிர கட்சி வழக்குத் தொடரவில்லை. இந்த விவகாரத்தில், சட்டப்படி 15 நாள்களில் மன்னித்து, தகுதிநீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதை பேரவைத் தலைவா் ஏற்றுக் கொண்டுள்ளாா். இதில் எந்தத் தவறும் இல்லை. தற்போதைய நிலையில் எந்தக் கட்சித் தாவல் நடவடிக்கையும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments