“இனோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும்..” தவெக எம்.எல்.ஏ. பேச்சால் சிரிப்பலை!
தவெக எம்.எல்.ஏ. சண்முகனின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை...
எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் கார், இனோவா காராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தவெக எம்.எல்.ஏ.வின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆக. 5-ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆக. 12-ஆம் தேதி பேசிய காட்டுமன்னார்கோவில் விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி, தன்னிடம் வாகன வசதி இல்லை என்றும், உதவியாளரை வைத்து ஊதியம் கொடுக்கும் அளவுக்கு பணம் இல்லை என்றும், முதல்முறை எம்.எல்.ஏக்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், விதி எண் 110-ன்கீழ் இன்று காலை (ஆக. 19) சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும். வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்” என்று அறிவித்து எம்.எல்.ஏக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
Advertisement
Advertisement
முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து எம்.எல்.ஏக்கள் பலரும் பேசினர். அதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ டி. சண்முகன் பேசுகையில், “எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து அமர்ந்திருக்கக் கூடிய நமது முதல்வர் அவர்களுக்கு, கேட்பவர்களின் கோரிக்கை நியாயமான கோரிக்கையாக இருந்தால் மக்களிடமிருந்து வந்தாலும் சரி, சட்டப்பேரவை உறுப்பினர்களிடமிருந்து வந்தாலும் சரி உடனடியாக நிறைவேற்றப்படும் என்பதை நமது முதல்வர் அவர்கள் நிரூபித்திருக்கிறார்.
அறம், நேர்மை, மக்கள் நலன் ஆகிய மூன்றின் அடிப்படையில் தமிழ்நாட்டைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்வர் அவர்கள் கொடுக்கிற காரை இனோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருப்பவர்கள் கூறுகிறார்கள்” என்றார்.
தவெக எம்.எல்.ஏ. சண்முகனின் பேச்சைக் கேட்டு, முதல்வர் விஜய், பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அவை உறுப்பினர்களும் சிரித்ததால், அவையில் சிரிப்பலை எழுந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.