மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது: இந்திய கம்யூ.
மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது பற்றி...
மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிப் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரிக் கட்சிகள், தமிழ்நாடு கரப்பான்பூச்சி கட்சி நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுப்பதற்காக பள்ளிக் கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தியக் குடிமக்களுக்கு அரசியல் சிந்தனை, சமூக அக்கறை, கருத்துரிமை, அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாணவர்களும், இளைஞர்களும் நாட்டின் குடிமக்களாவர். கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள் என்பதற்காக, அந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்க முடியாது.
Advertisement
Advertisement
18 வயதானவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கும் போது, அவர்கள் தமது அரசியல் செயல்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது என்று அரசு தடுப்பது, கல்வி நிறுவனங்களை ஜனநாயக விவாதங்களிலிருந்து துண்டித்து, இளைஞர், மாணவர்களை அரசியலற்றவர்களாக மாற்ற முயலும் அதிகார வர்க்க அணுகுமுறையாகும். நாட்டின் விடுதலைப் போராட்டம் உள்ளிட்டு, வரலாற்றில் மாணவர்களும், இளைஞர்களும் சமூக மாற்றத்தின் முக்கிய சக்தியாகத் திகழ்ந்துள்ளனர்.
நாட்டின் விடுதலை நாளன்று செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றிய பிரதமர் மோடி, அரசுக் கொள்கைகளுக்கு மாற்றாகச் சிந்திப்பவர்களை, “திமாகி நக்சல்” என்றும், அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பட்டியலை, முகவரியோடு ஒரே நாளில் தயாரித்துத் தருமாறு வட்டாட்சியர் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாகவே, இந்த உத்தரவும் வந்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. இந்த ஆணைகள் தற்போது திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், இவற்றுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து கடுமையான துறைவாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
அந்தப் போராட்ட வரலாற்றை மறுப்பதும், மாணவர்களின் அரசியல் உணர்வை குற்றமாகக் கருதுவதும் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானதாகும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளை குடிமக்கள் அனுபவிக்க விடாமல் தடுப்பதுதான் குற்றச்செயலாகும்.
மாணவர்களின் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வைத் தடுப்பதற்குப் பதிலாக, அரசியலமைப்புச் சட்ட உரிமைகள், ஜனநாயக மாண்புகள், சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை கல்வி நிறுவனங்களில் வலுப்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கருத்துகளை அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் வெளிப்படுத்துவதற்கான உரிமையை அரசு முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள, கல்வி நிறுவன மாணவர் பேரவைத் தேர்தல்களை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது என்று மு. வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
Communist Party of India State Secretary M. Veerapandian has urged the Tamil Nadu government not to deprive students and the youth of their democratic rights.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.