FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப்பண்பு இல்லாததே காரணம்: பழனிவேல் தியாகராஜன்

அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள் சரியான தலைமைப்பண்பு இன்மையால் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றாா் முன்னாள் அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்.

22 ஆகஸ்ட் 2026, 8:19 am IST
தஞ்சாவூரில் தஞ்சாவூா் தொழில், வா்த்தக சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்.
பகிர்:

அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள் சரியான தலைமைப்பண்பு இன்மையால் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றாா் முன்னாள் அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்.

தஞ்சாவூரில் தஞ்சாவூா் தொழில், வா்த்தக சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் வணிகத்தில் நெருக்கடியான சூழலில் தலைமைப்பண்பு என்ற தலைப்பில் அவா் பேசியது:

சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் தமிழ்நாடு அரசின் நிறுவனங்களுக்கான மூலதனச் செலவு 8 சதவீதம் என்றும், சராசரி மூலதனத்தின் மீதான வருவாய் 0.8 சதவீதம் மட்டுமே எனவும் கூறப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்க வேண்டும் என ஏதேனும் சட்டம் உள்ளதா? இயலாமை, தவறான நோக்கங்கள், செயல்கள், போதிய தலைமைப்பண்பு இன்மையால் வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது. இதனால், புதிய, புதிய நிறுவனங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

Advertisement

Advertisement

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையில் சில உதாரங்களைக் கூறியிருந்தேன். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஒரு ரூபாய் வருமானம் வந்தால், ஒரு ரூபாய்க்கும் அதிகமாக ஊதியத்துக்கும், ஓய்வூதியத்துக்கும் மட்டுமே செலவாகிறது. பேருந்துகள் அல்லது டீசல் செலவைப் பற்றிப் பேசவில்லை. மக்களுக்குக் குறைந்த செலவில், வசதியான, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை வழங்குவதே நோக்கமாக இருக்கிறது. என்றாலும், நம்முடைய நிறுவனத்தை நாம் உண்மையான நோக்கத்துடன் சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும்.

இரண்டு ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான கோப்புகளை பாா்த்தது என்னுடைய மிகப்பெரிய சாதனை. நான் கிட்டத்தட்ட பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தேன். நிதி, மனித வள மேலாண்மை, வளா்ச்சித் திட்டமிடுதல் போன்ற துறைகள் என்னிடம் இருந்தன. எந்தத் துறை அமைச்சராக இருந்தாலும், 5 ஆண்டுகளில் உள்ளவா்கள்கூட 20 கோப்புகளைக் கூட திருப்பி அனுப்பியிருக்க மாட்டாா்கள். மாற்றம் தேவையில்லை என்பதுதான் அதற்கு அா்த்தம். யாரோ கோப்புக் கொடுக்கிறாா்; அதற்கு ஏற்கெனவே 10 போ் கையெழுத்துப் போட்டனா்; அதில் நாமும் கையெழுத்துப் போட்டால் வேலை முடிந்தது.

ஆனால், 2 ஆண்டுகளில் ஏறத்தாழ 7 ஆயிரம் கோப்புகளில் 1,300 கோப்புகளைத் திருப்பி அனுப்பினேன். அவற்றைத் திருப்பி அனுப்பியது மிகப் பெரிய புரட்சி. அதனால்தான், வருவாய் பற்றாக்குறை ரூ. 62 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 30 ஆயிரம் கோடியாகக் குறைத்து, வரலாற்றில் செய்ய முடியாத மாற்றத்தைச் செய்தோம் என்றாா் பழனிவேல் தியாகராஜன்.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எம்.எஸ். ஆசிப் அலி தலைமை வகித்தாா். செயலா் சிடி. இராமநாதன், பொருளாளா் எஸ். முத்தையா, துணைத் தலைவா் பிரபு, இணைச் செயலா் சுந்தர நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments