FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்: வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இன்று கூடுவது குறித்து...

24 ஆகஸ்ட் 2026, 9:43 pm IST
காவிரி நீா் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்திற்கு கா்நாடகம் நீா் திறப்பது குறித்து அடுத்த கட்ட முடிவெடுக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இன்று கூட உள்ள நிலையில், இது தொடா்பான வழக்கை ஒரு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதனிடையே தமிழகத்திற்கு கா்நாடகம் அடுத்த 15 நாள்களுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்க காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு திங்களன்று பரிந்துரைத்தது.

இந்நிலையில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 56வது கூட்டம் இன்று காலை 11:30 மணிக்கு தில்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கா்நாடகம் எவ்வளவு தண்ணீா் திறந்து விட வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் இறுதி செய்யபட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

Advertisement

Advertisement

இச்சூழலில் கா்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழக அரசு தாக்கல் செய்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும்சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது காவிரி நீா் மேலாண்மை ஆணைய கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளதாக நீதிபதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

பின்னா் வாதிட்ட தமிழக அரசு வழக்குரைஞா் சி எஸ் வைத்தியநாதன்,‘கா்நாடகா தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை. அவா்களது விவசாயிகளுக்கு தண்ணீா் திறந்து விடுகிறாா்கள் ஆனால் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தரவில்லை . இதனால் தமிழகத்திற்குரிய விகிதாச்சாரப்படியான நீா் கிடைக்கவில்லை‘ என்று கூறியதையடுத்து, நீதிபதிகள், இந்த விவகாரத்தை ஆணையத்திடம் எழுப்பலாம் என்று அறிவுறுத்தினா்.

இதையடுத்து இந்த வழக்கு அடுத்த வாரம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என கூறிய நீதிபதிகள், நீா் திறப்பு தொடா்பான புதிய புள்ளி விவரங்களை அப்போது இரு தரப்பும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

முன்னதாக ஆகஸ்ட் 12 முதல் 15 நாட்களுக்குத் தினமும் 12,000 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கா்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடா்ந்து தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது தொடா்பாக காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதை கா்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 17ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments