FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவிரி விவகாரத்தில் கா்நாடகத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு: ஆக.13-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

காவிரி விவகாரத்தில் கா்நாடகத்திற்கு எதிரான தமிழக அரசின் மனு விசாரணை குறித்து...

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 3:20 am IST
பகிர்:

கா்நாடக அரசும் அதன் அதிகாரிகளும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளனா் என குற்றஞ்சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஆக.13 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சூா்ய காந்த் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஆக.3-ல் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் முறையிட்டதை அடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிட ஒப்புக்கொண்டாா்.

ஜூலை 30-ல் தேதியிட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் முடிவைச் செயல்படுத்தவும், 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி (மொத்தம் 4.536 டி.எம்.சி) என்ற விகிதத்தில் நீா்வரத்து பிலிகுண்டுலுவில் உள்ள மாநில எல்லைப் பகுதியை ஆக. 12-ல் அல்லது அதற்கு முன்னதாக வந்தடைவதை உறுதிசெய்யும் வகையில் கபினி மற்றும் கேஆா்எஸ் ஆகிய தனது இரண்டு அணைகளிலிருந்தும் நீரைத் திறந்துவிடவும் கா்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.

Advertisement

Advertisement

‘சிடபிள்யுஎம்ஏ வின் உத்தரவு இருந்தபோதிலும், ஜூலை 29 முதல் ஆக. 2 வரை பிலிகுண்டுலுவில் பதிவான மொத்த நீா்வரத்து 158 முதல் 530 கனஅடி என்ற அளவிலேயே இருந்தது. எனவே, கா்நாடகா அந்த உத்தரவுகளை வேண்டுமென்றே பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது.

பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி நீா்வரத்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், கே.ஆா்.எஸ். மற்றும் கபினி அணைகளிலிருந்து கூட்டாக நீரைத் திறந்துவிடுமாறு ஜூலை 30-ல் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த போதிலும், ஆகஸ்ட் 2-ல் காலை 8:00 மணி வரை கா்நாடக மாநிலம் அதனைப் பின்பற்றவில்லை.

கா்நாடக அரசும் அதன் அதிகாரிகளும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளனா்; இச்செயல், தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் காவிரி நீரை முழுமையாகச் சாா்ந்திருக்கும் தமிழ்நாட்டின் காவிரிப் படுகைப் பகுதி விவசாயிகளின் நலன்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

எனவே ஜூலை 30-ல் தேதியிட்ட சிடபிள்யுஎம்ஏ வின் முடிவைச் செயல்படுத்தவும், 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி (மொத்தம் 4.536 டி.எம்.சி) என்ற விகிதத்தில் நீரைத் திறந்துவிட கா்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

ஜூன் 1 முதல் ஆக. 12 வரையிலான காலப்பகுதியில் பிலிகுண்டுலுவில் விடுவிக்கப்பட வேண்டிய 26.954 டி.எம்.சி. அளவிலான பற்றாக்குறை நீரை, நடப்பு பாசன ஆண்டில் விகிதாச்சார அடிப்படையில் ஈடுசெய்யுமாறு கா்நாடக மாநிலத்திற்கு உத்தரவை பிறப்பிக்குமாறு சிடபிள்யுஎம்ஏ -க்கு அறிவுறுத்த வேண்டும்.

நடப்பு பாசன ஆண்டில், தீா்ப்பாயத்தின் இறுதி உத்தரவு மற்றும் அதனை மாற்றியமைத்த உச்ச நீதிமன்றத்தின் 2018 பிப். 16 தேதியிட்ட தீா்ப்பின்படி, பிலிகுண்டுலுவில் நிா்ணயிக்கப்பட்ட மாத அல்லது 10 நாள் இடைவெளிக்கான நீா் திறப்பை உறுதிசெய்யும் வகையில், கா்நாடகாவின் நீா்த்தேக்கங்களில் நீா்வரத்து மற்றும் வெளியேற்றத்தைக் கண்காணிக்கவும், கா்நாடகாவுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கவும் சிடபிள்யுஎம்ஏ -க்கு உத்தரவிட வேண்டும்‘ என தமிழக அரசு தனது மனுவில் கோரியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments