புதிய மொந்தையில் பழைய கள்ளாய் மாறும் தவெக: விசிக துணைப் பொதுச் செயலாளர் விமர்சனம்
புதிய மொந்தையில் பழைய கள்ளாய் தமிழக வெற்றிக் கழகம் மாறும் என விசிக துணைப் பொதுச் செயலாளர் விமர்சனம் செய்திருப்பது குறித்து...
புதிய மொந்தையில் பழைய கள்ளாய் மாறும் தமிழக வெற்றிக் கழகம், மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை என விசிக துணைப் பொதுச் செயலாளர் சா.ரஜினிகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்க பதிவில்,
ஜென்சி எனப்படும் புதிய தலைமுறை நிரம்பிய ஒரு பேரியக்கம் என்று நம்பப்பட்ட முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஊழலை ஒழித்து தூயமையான ஆட்சி நிர்வாகத்தை கொடுப்பதுதான் தமது முதன்மையான நோக்கம் என்று கூறி வருகிறது. அதனை தமிழக மக்களும் பெரிதாக நம்பி வருகிறார்கள்.
Advertisement
Advertisement
ஆனால், தவெகவின் இன்றைய செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக அமைந்துள்ளது . ஏற்கனவே ஊழலில் திளைத்து வழக்குகளை சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர்களையும், ஊழல் சக்தி என்று முதல்வர் விஜய்யின் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் கட்சியில் பெருமளவில் சேர்த்து வருவதும், அதனை அமைச்சர் செங்கோட்டையன் போன்றவர்கள் பெருமையாக பேசிவருவதும் தவெக ஊழல் பேர்வழிகள் நிரம்பிய கூடாரமாக மாறி வருகிறதோ என்ற அய்யத்தை மக்களுக்கு ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
அமைச்சர் செங்கோடையன் அதிமுகவைச் சேர்ந்த இன்னும் 10 பேர் விரைவில் தவெக-வில் இணைய உள்ளனர், அந்த எண்ணிக்கை 25-ஐ தாண்டும் என்று சொல்லியிருப்பது இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எத்தகைய மக்கள் சிந்தனையும் இல்லாமல் பதவியும், பணமும் மட்டுமே தங்களது குறிக்கோள் என்று செயல்பட்டுவரும் ஊழல் பெருச்சாளிகள் தவெக-வில் இணைந்ததும் வாஷிங் மெஷினில் துவைக்கப்பட்டு தூய்மையானவர்களாக மாறிவிடுகிறார்களா? என்ற எதிக்கட்சிகளின் கேள்விக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
அதே போன்று தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் உண்மையே என்ற எண்ணத்தையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆகவே, தமிழக வெற்றிக் கழகம் இத்தகைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இவை தொடருமேயானால் தமிழக வெற்றிக் கழகம் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்துள்ளார்.
TVK turning into old toddy in a new pot: VCK Deputy General Secretary's criticism
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.