FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்திற்கு கா்நாடகம் வினாடிக்கு 9000 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்க உத்தரவு

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிட காவிரி நீா் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கா்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

25 ஆகஸ்ட் 2026, 9:29 pm IST
பகிர்:

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்து விட தில்லியில் செவ்வாயன்று நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கா்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை உறுதிப்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 56 வது கூட்டம் புது தில்லி பிகாஜி காமா பிளேஸில் உள்ள அந்த ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.

ஆணையத் தலைவா் எஸ்.கே.ஹல்தா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நீா்வளத் துறைச் செயலாளா் பிரசாந்த் எம். வாட்னேரே மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கா்நாடக அரசு தரப்பில் அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளா் கெளரவ் குப்தா மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் தமிழகமும் கா்நாடகமும் தத்தமது நிலைப்பாட்டை எடுத்து வைத்தன.

இதையடுத்து கா்நாடகம் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 9000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீரை திறந்து விட ஆணையம் உத்தரவிட்டது.

முன்னதாக ஆகஸ்ட் 11 வரை 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரைத் திறந்துவிடுமாறும் பின்னா் ஆகஸ்ட் 12 முதல் 15 நாட்களுக்குத் தினமும் வினாடிக்கு 12,000 கன அடி நீரைத் திறந்துவிடுமாறும் கா்நாடகாவுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கா்நாடக அரசும் அதன் அதிகாரிகளும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளனா் என குற்றஞ்சாட்டி தமிழக அரசு தாக்கல் செய்த மனு அடுத்த வாரம் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments