சீன குடியுரிமை அலுவலகத்தில் இருந்த 49 தமிழர்கள்! அப்பகுதியை வாரிச் சுருட்டிய வெள்ளம்!
குரோம்பேட்டையிலிருந்து நேபாளம் சென்ற 49 தமிழர்களும் சீன குடியுரிமை அலுவலகத்தில் இருந்தபோது அப்பகுதியை வெள்ளம் வாரிச் சுருட்டிச் சென்றிருக்கிறது.
நேபாளத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை நேரிட்ட பெரு வெள்ளத்தின்போது, சீன குடியுரிமை அலுவலகத்தின் பின்பக்கத்திலிருந்து காட்டாற்று வெள்ளம் அடித்துச் செல்லும் விடியோக்கள் வெளியாகியிருந்தன.
வெள்ளம் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, அந்த சீன குடியுரிமை அலுவலகமே அடையாளமின்றி, அதன் அடிப்பகுதியே ஒட்டுமொத்தமாக அடித்துச் செல்லப்பட்டிருந்த புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
அதிர்ச்சி தரும் வகையில், அந்த சீன குடியுரிமை அலுவலகத்தில்தான், பெருவெள்ள சம்பவத்தின்போது தமிழகத்திலிருந்து குறிப்பாக சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் சுற்றுலா ஏஜென்ஸி அழைத்துச் சென்றிருந்த 49 பேரும் இருந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
தமிழர்களின் குழு புகைப்படம் சீன குடியுரிமை அலுவலகத்தில், வெள்ளம் வருவதற்கு சற்று முன்னதாக எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டபிறகு அந்த குடியுரிமை அலுவலகக் கட்டடம் மட்டும் அங்கு நிற்கிறது, அதன் அடித்தரைகூட அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், குடியுரிமை அலுவலகத்தில் இருந்த 49 தமிழர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு, அதன் எல்லையிலிருந்து நேபாள எல்லைக்குள் செல்வதற்கு அனுமதி கேட்டு, சீன குடியுரிமை அலுவலகத்தில் தமிழர்கள் காத்திருந்த போது, அங்கு பெரு வெள்ளம் நேரிட்டிருக்கிறது. அந்த அலுவலகத்துக்கு எதிரே இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது.
மகாதேவ் கைலாஷ் யாத்ரா நிறுவனம் நடத்தி வரும் குரோம்பேட்டை ராதா நகரைச் சோ்ந்த மாறவேல் நாகப்பன் (55) என்பவர் கூறுகையில், என்னுடைய மகன் சத்தியநாராயணன் (28) தலைமயில் கடந்த 14-ஆம் தேதி குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த 9 போ், காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 40 போ் என மொத்தம் 49 போ் கைலாஷ் யாத்திரைக்குச் சென்றனா்.
கைலாஷ் யாத்திரையை திட்டமிட்டபடி நிறைவு செய்துவிட்டு தமிழகக் குழுவினா், சீனாவிலிருந்து நேபாளத்துக்குள் நுழைவதற்காக புதன்கிழமை காலை 10.18 மணியளவில் கைரோங்க் சீன குடியுரிமைத் துறை அலுவலகத்துக்குள் சென்றனா். 10.30 மணிக்கு அந்தப் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதாவது, பெரு வெள்ளம் ஏற்படுவதற்கு 12 நிமிடங்களுக்கு முன்பு வரை தமிழர்கள் அங்கிருந்ததாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகுதான் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அதன்பிறகு 49 பேரும் என்ன ஆனாா்கள் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
இவர்கள் அனைவரும் 27-ஆம் தேதி நண்பகல் 1.30 மணியளவில் காத்மாண்டுவில் இருந்து தில்லிக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது. வியாழக்கிழமை மாலை சென்னை திரும்ப வேண்டியவர்களுக்காக அவர்களது குடும்பங்கள் காத்துக் கிடக்கின்றனர் நல்ல செய்தி வருமா என்ற ஆவலோடு.
49 Tamils were at the Chinese citizenship office! Floodwaters swept through the entire area!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.