தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது பற்றி...
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படத் துறையினரின் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதிய திரைப்படங்கள் வெளியாகி, 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வருகிற செப். 1 ஆம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள், ரிலீஸ் எதுவும் இருக்காது என வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் ராஜ்மோகன் பேசியது மட்டுமின்றி பேரவை முடிந்தபிறகு தீர்வு காண பேச்சுவார்ததை நடத்துவதாகக் கூறியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்த் திரைப்படத்துறையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து கடந்த 26.08.2026 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் ஏ.ராஜ்மோகனைச் சந்தித்து திரைத்துறையில் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைத்து மனுவாக அளித்துள்ளோம்.
அந்த மனுவினை பரிசீலித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் தற்போது தமிழ்நாட்டில் திரைப்பட வெளியீட்டில் என்ன நடைமுறை உள்ளதோ அதனை தொடர்ந்து பின்பற்றுங்கள், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகியோரை தமிழ்நாடு அரசு அழைத்து மேற்படி பிரச்சனைக்கு தீர்வு காணும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும் தற்போது வேலை நிறுத்தம் என்பது வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
மேற்படி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, இதனை முதல்வர் ஜோசப் விஜய் கவனத்திற்கு கொண்டு சென்று, முதல்வரின் வழிகாட்டுதலோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்ததின் அடிப்படையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1-முதல் அறிவித்த (புதிய திரைப்படங்கள் வெளியீடு, படப்பிடிப்பு பணிகள், போஸ்ட் புரொடக்ஷன்) வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Film Producers Council protest temporarily called off
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.