முதல்வர் விஜய் ஆட்சியில் சட்டப்பேரவை மாண்பு சீர்குலைகிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
முதல்வர் விஜய் ஆட்சியில் சட்டப்பேரவை மாண்பு சீர்குலைகிறது என நயினார் நாகேந்திரன் விமர்சனமம் செய்திருப்பது தொடர்பாக...
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அரங்கேறும் மத அரசியலால் முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் சட்டப்பேரவை மாண்பு சீர்குலைகிறது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாரேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு மிக உன்னதமான அரசியல் சாசனப் பதவியாகும். ஆனால், தற்போதைய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக பகிரங்கமாக தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வதோடு, தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று அவரது இருக்கையில் அமர்ந்துகொண்டே வெளிப்படையாகக் கோரிக்கை விடுக்கிறார். இது முதல்வர் ஜோசப் விஜய்க்கு கட்டளையிடுவது போலவே அமைந்திருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த சட்டப்பேரவை வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதற்கு முன்பு பல பேரவைத் தலைவர்கள் இந்தப் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் தான் சார்ந்த மதத்தையோ அல்லது சாதியையோ முன்னிலைப்படுத்திப் பேசியது கிடையாது. ஆனால், தவெக அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே முதல்வர் ஜோசப் விஜய், இது சிறுபான்மையினருக்கான அரசு என்று முன்னிலைப்படுத்திப் பேசுகிறார். அமைச்சர் மரிய வில்சனோ கையில் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அத்துடன் நில்லாமல், தான் ஒரு கிறிஸ்தவர் என்று சட்டப்பேரவையில் குறிப்பிடுவதோடு, தமிழ் மொழியை விடத் தனது மதமே உயர்ந்தது என்கிறார். சட்டப்பேரவையில் பைபிள் வசனங்களைக் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்.
அவர்களின் மத நம்பிக்கைகளைத் தவறு என்று கூறவில்லை. ஆனால், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை சட்டப்பேரவைக்குள் பேசுவதும், செயல்படுத்துவதும் பேரவையின் மாண்பைக் குலைப்பதோடு, இந்த பேரவையே ஒரு குறிப்பிட்ட மதம் நோக்கி நகர்த்துவது போல் உள்ளது. இது நல்லதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, பேரவைத் தலைவர் பதவியில் இருப்பவர் இதைப் பற்றிப் பேசுவது முற்றிலும் தவறான விஷயமாகும். எனவே, இனியாவது பேரவைத் தலைவர் மற்றும் தவெகவின் அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சாதி, மத விஷயங்களை பேரவைக்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
The dignity of the Legislative Assembly is being undermined under Chief Minister Vijay's rule: Nainar Nagendran criticizes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.