FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு: தவெக அரசை கண்டித்து செப்.3-ல் அலங்காநல்லூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தவெக அரசை கண்டித்து செப்.3-ல் அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள அதிமுக ஆர்ப்பாட்டம் குறித்து...

பகிர்:

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 'ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது' என்று அநாகரீகமாக கொச்சைப்படுத்திப் பேசி இருக்கின்ற சோழவந்தான் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினரையும், தவெக அரசையும் கண்டித்து, ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் அதிமுக சார்பில் அலங்காநல்லூா் வாடி வாசல் அருகே வரும் செப்.3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக சட்டப்பேரவையில் சோழவந்தான் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் எம்.வி.கருப்பையா தமிழா்களின் பாரம்பரிய, கலாசார, நாகரீக, வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி இளைஞா்களை சீரழிக்கிறது என அநாகரீகமாக, கொச்சைப்படுத்தி பேசியிருப்பது பொதுமக்கள், இளைஞா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

தவெகவினர் பலர் தான்தோன்றித்தனமாக பேசி வருவது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு கலந்ததால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் வரலாற்று சிறப்புமிக்க மிக்க அறப் போராட்டத்தை நடத்தினர். அப்போதைய அதிமுக அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 2017-ஆம் ஆண்டு ஜன.21-ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அரசு, சட்டப் பேரவையில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிரந்தரச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது தமிழர்களின் கலாசார பாரம்பரியம் என சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

2017-ஆம் ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்குகள் நல அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு மே.18-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கலாம் என்றும் இறுதித் தீர்ப்பு அளித்தது. இவ்வாறு ஜல்லிக்கட்டுப் போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு, அதிமுக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களே காரணம்.

இந்த நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை சீரழிக்கிறது என்று சட்டப்பேரவையில் அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசிய சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரை கருப்பையாவையும், மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வரும் ரீல்ஸ் மாடல் தவெக அரசையும் கண்டித்து அதிமுக மதுரை மாநகா், மதுரை புறநகா் கிழக்கு, மேற்கு ஆகியவை சாா்பில் வரும் செப்டம்பா் 3 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் அலங்காநல்லூா் வாடிவாசல் அருகே மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், புறநகா் கிழக்கு மாவட்டச் செயலா் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில், எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் கி. மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகிப்பா்.

ஆா்ப்பாட்டத்தில் அதிமுக அனைத்துப் பிரிவு நிா்வாகிகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைபிடி வீரா்கள், ஜல்லிக்கட்டு காளை வளா்ப்பவா்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு நலச் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளார்.

summary

Regarding the AIADMK protest against the TVK government, scheduled to be held in Alanganallur on September 3...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments