FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்

மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல என்று திருமாவளவன் பேசியது குறித்து...

விசிக தலைவர் திருமாவளவன். - படம்- தினமணி
பகிர்:

மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல என்று விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் பேசியதாவது:

கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது இது உள்ளக்கத்தோடு நடந்துள்ளதா என கேள்வி எழுகிறது.

Advertisement

Advertisement

இதற்குப் பொறுப்புள்ள அதிகாரிகளும், அமைச்சர்களும் உரிய விளக்கத்தை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். இனி வரும் காலங்களில் அது போன்ற பிழைகள் நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, ”அது ஏற்புடையதல்ல இதுவரை வழங்கி வந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், எஸ்எஃப்ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்பினரையும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள் மீதான அரசின் நடவடிக்கை மென்மையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,

”இது குறித்து ஏற்கெனவே எனது கருத்தை கூறியுள்ளேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்படியே வழிமொழிகிறது. இந்த அணுகுமுறையும் ஏற்புடையதல்ல. முதல்வர் இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். தோழமைக் கட்சிகளைப் புண்படுத்தாத வகையிலான அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

திமுக ஆட்சிக் காலத்தில் தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு,

”எதுவும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. திரித்துப் பேசக்கூடாது. பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தோம் என கூறினார்கள் அது உண்மைதான். பொதுத்தொகுதிகளில் நிற்க வைப்பது இயல்பான ஒன்றுதான்.

தலித்துகள் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியும். ஆனால், தலித் அல்லாதவர்கள் தனித் தொகுதிகளில் போட்டியிட முடியாது. அது சட்டப்படி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிறுத்துவதை ஏதோ அவர்களுக்கு பரிதாபப்பட்டு நிறுத்தினீர்களா அல்லது தகுதியானவர் அடிப்படையில் நிறுத்தினீர்களா என வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

வன்னி அரசு தவறாக பேசினார் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். தலித்துகளை பொது தொகுதிகளில் நிறுத்துவது இறக்கப்பட்டு செய்வது போல என்று சொல்லக்கூடாது” என்று தெரிவித்தார்.

தவெக அரசு இந்த ஐந்து ஆண்டுகளில் தலித்துகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,

”தவெக தலைமையிலான இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு இன்னும் பல சட்டப்பூர்வ உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துக்களால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன. ஆட்சியாளர்கள் விரும்பினாலும் அதிகாரிகள் சில இடங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியாக, தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அரசு செய்ய வேண்டிய அவசியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரிய தீர்வுகளைப் பெற விசிக தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

summary

VCK leader and Lok Sabha MP Thirumavalavan stated on Sunday (August 30) that the reduction in security provided to M.K. Stalin is unacceptable.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments