காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக 183 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர்ந்து 5 நாள்களாகக் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் நடைபெற்ற சாலை மறியல் காரணமாக அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தி. முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் என். நாராயணன், மாநிலச் செயலாளர் மகேந்திரபூபதி, மாவட்ட மகளிர் அணியின் துணைச் செயலாளர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராம உதவியாளர்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தித் தொடர்ந்து 5 நாள்களாக காத்திருக்கும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் மறியல் காரணமாக காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்துக் காவல்துறை டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலைக் கைவிடாததால் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டதாக 92 பெண்கள் உள்பட மொத்தம் 183 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.