வீரம், பாசம், கோயில், சாப்பாடு என்றாலே மதுரைதான் தெற்கு மண்டல வாக்குச் சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திமுகவின் தெற்கு மண்டல வாக்குச் சாவடி முகவர்கள் மாநாடு இன்று (பிப்.21) மதுரை உத்தக்குடியில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, அமைச்சர்கள் மூர்த்தி, கே. என். நேரு, தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஐ. பெரியசாமி, மனோ தங்கராஜ், எம்பி டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “வீரம், பாசம், கோயில், சாப்பாடு என்றாலும் மதுரைதான், இங்கு எல்லாமே பிரபலம்தான். அப்படி பெருமைமிகு மதுரையில் 'என் வாக்குச் சாவடி, வெற்றி சாவடி' பயிற்சி மாநாட்டில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
சித்திரைத் திருவிழா போல கூடியிருக்கும் உங்களைப் பார்த்து உற்சாகம் அடைகிறேன். உத்தங்குடி முழுக்கவே உடன்பிறப்புகள் குடியேறிவிட்டதுபோல உணர்வு. இனி நாமதான். இனி எப்போதுமே நாமதான்.
நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தைத் தொடங்கி இந்தியாவிலேயே அதிகளவில் கிட்டத்தட்ட ஒரு கோடி உறுப்பினர்களை அதில் இணைத்தோம்.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டபோதும் யாருடைய பெயரும் நீங்கிடாத வகையில் பம்பரமாக சுழன்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.
மதுரை மாநாடு வெறும் ட்ரைலர்தான், திருச்சியில் தான் மெயின் பிக்சர் இருக்கிறது. திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் பத்து லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டிருக்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு திமுகவினருக்கு ஓய்வே கிடையாது. எல்லாவற்றையும் திட்டமிட்டு வைத்திருக்கிறோம்.
சமூக வலைதளமாக இருந்தாலும், வீடுகளாக இருந்தாலும் திமுகவினர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் 350 வாக்குகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டாலே எளிதாக வெற்றி பெற்று விடலாம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.