மறைந்த முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, 'வீர வணக்கம்' என முதல்வர் மு.க. ஸ்டாலின் முழக்கமிட்டார்.
வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட வீரர் நல்லகண்ணு நேற்று(பிப். 25) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 101.
அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில அலுவலகமான 'பாலன் இல்லத்தில்' வைக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று மாலை 4 மணியளவில் நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்துகொண்டு நல்லகண்ணுவுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் 'வீர வணக்கம், வீர வணக்கம், தகைசால் தமிழருக்கு வீர வணக்கம், வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம், செவ்வணக்கம், செவ்வணக்கம் வாழ்நாள் போராளிக்கு செவ்வணக்கம்' என்று உணர்ச்சிவசத்துடன் முழக்கமிட்டார். அவரைப் பின்தொடர்ந்து பலரும் முழக்கமிட்டனர். தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செய்யப்பட்டது.
இதன்பின்னர் நல்லகண்ணுவின் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அவரது விருப்பப்படி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவரது உடல் ஒப்படைக்கப்படுகிறது. அவரது இறுதி ஊர்வலத்திலும் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.