ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சந்திரசேகர கம்பாரா!
ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது விழாவில், கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.
சென்னையில் இன்று நடைபெற்ற ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்கும் விழாவில், நாட்டின் மிகவும் மதிக்கப்படும் இலக்கிய படைப்பாளிகளில் ஒருவரும் கன்னட எழுத்தாளருமான டாக்டர் சந்திரசேகர கம்பாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதுகள் இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.
வாழ்நாள் சாதனையாளர் விருது, அ-புனைவு, புனைவு மற்றும் அறிமுக எழுத்தாளர் என நான்கு பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
அதில் வாழ்நாள் சாதனையாளர் விருது, கன்னட எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் சிந்தனையாளர், நாடக எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர், மற்றும் நாடக ஆர்வலராகவும் அறியப்படும் டாக்டர் சந்திரசேகர கம்பாராவின் இலக்கியப் பணி, நாட்டின் கலாசார உருவத்தை மிக ஆழமாக வடிவமைத்ததற்காக வழங்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புற மரபு மற்றும் வாய்மொழியாகக் கிடைத்த வரலாறுகளிலிருந்து வலிமையான கருத்துகளைப் பெற்ற, டாக்டர் சந்திரசேகர கம்பாராவின் எழுத்துகள் மற்றும் நாடகங்கள், பாரம்பரியம் - சமகாலம், உள்ளூர் - உலகளாவியம் இடையே ஒரு பாலமாக அமைந்திருக்கின்றன.
இவரது ஆழமான, ஒருமைப்பாட்டுடன், இலக்கியத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில், இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது என்று விருது விழாவில் அறிவிக்கப்பட்டது.
மேலும், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டாக்டர் சந்திரசேகர கம்பாரா, இன்று தன்னுடைய 89-வது பிறந்தநாளையும் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. டாக்டர் சந்திரசேகர கம்பாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.
இவரைத் தொடர்ந்து புனைவுக்கான பிரிவில் 'டேல்ஸ் ஃபிரம் தி டான்-லிட் மெளண்ட்டெயின்ஸ்' என்ற நூலை எழுதிய சுபி தாபாவுக்கும் அ-புனைவுக்கான பிரிவில் 'ஃபாலன் சிட்டி - எ டபுள் மர்டர், பொலிடிகல் இன்சானிடி அன்ட் தில்லி டெசென்ட்' என்ற நூலை எழுதிய சுதீப் சக்ரவர்த்திக்கும், சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது நேகா தீட்சித் அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
முன்னதாக, விருது வழங்கும் விழாவில் வரவேற்றுப் பேசிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா, ராம்நாத் கோயங்காவைப் பொருத்தவரை சாகித்தியம்தான் (இலக்கியம்) நாட்டின் ஆன்மா. இலக்கியம்தான், நமது ஜனநாயகத்தை வடிவமைக்கிறது, இது மனிதன் பெறும் அனுபவத்தின் ஒரு களஞ்சியம் என்று கூறினார்.
விருது விழாவில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். விருது பெற்றவர்களும் ஏற்புரையாற்றினர். நிறைவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன் நன்றி கூறினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா தலைமையில் நடைபெற்ற விழாவில், குழுமத்தின் தலைமைச் செயல் நிர்வாகி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்த்வானா பட்டாச்சார்ய, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
Kannada writer Chandrasekhar Kampara was awarded the Lifetime Achievement Award at the Ramnath Goenka Sahitya Samman Awards ceremony.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.