முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்!
முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இணையவுள்ளதைப் பற்றி...
முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இணையவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்து செயல்படத் தொடங்கினர்.
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்ததால், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்தவா்களின் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து நடவடிக்கை எடுத்திருந்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அவரது தரப்பைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தனர்.
ஆனால், முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமியுடன் இணையாமல் இருந்து வந்தார். அதைத்தொடர்ந்து, சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்தும் விலகினார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக சி. விஜயபாஸ்கர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே.
குறிப்பாக, தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய ‘கோவிட்’ பெருந்தொற்றுக் காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நன்கறிவீர்கள்.
நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான இணைப்பு விழா நாளை (ஜூலை 2), காலை 9.00 மணிக்கு மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெர்டோன் என்ற தனியார் ஹோட்டல் அரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது” என அந்த அறிக்கையில் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
இவருடன் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விராலிமலையில் இருந்து சுமார் 100 வாகனங்களில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஜெயகுமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் த.வெ.க.வில் இணைந்திருந்தனர்.
It has been officially announced that former Minister C. Vijayabaskar will join the Tamizhaga Vettri Kazhagam tomorrow (July 2) under the leadership of leader Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.