ரூ. 23 லட்சம் மோசடி புகார்! மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்!
ரூ. 23 லட்சம் மோசடி புகாரில் மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜரானதைப் பற்றி...
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பான புகாரில் சென்னை மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜூலை 1) ஆஜரானார்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (65). ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான இவர் தனது மகனுக்கு போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்குவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார்.
அப்போது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் (60) என்பவர் சீனிவாசனை அணுகி, திமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவசங்கருடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
சீனிவாசனின் மகனுக்குத் தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2023 முதல் 2025 வரை பல்வேறு தவணையாக சுமார் ரூ. 23 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு இளஞ்செழியன் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை இளஞ்செழியன் அரசு போக்குவரத்து கழகத்தில் தனது மகனுக்கு உதவி பொறியாளர் பணி வாங்கி தாரமலும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் தனது பணத்தை மீட்டுத் தரும்படியும் மோசடி செய்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மோசடி செய்த இளஞ்செழியனை தீவிரமாக தேடி வந்தனர். ஈரோடு மாவட்டத்தில் பதுங்கி இருந்த இளஞ்செழியனை தனிப்படை போலீசார் கடந்த ஜூன் 24 ஆம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்த இளஞ்செழியன் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் என செய்திகள் பரவின. இதற்கு சிவசங்கர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான விவரங்கள் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Former Minister Sivasankar appeared before the Chennai Central Crime Branch today (July 1) in connection with a complaint alleging fraud involving the collection of money under the pretext of securing government jobs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.