முகப்பு
தமிழ்நாடு

பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா? ஆர்.வி. ஆர்லேகருக்கு அமைச்சர் வன்னி அரசு கேள்வி

மதுரையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ஆர்.வி. ஆர்லேகர் ஆய்வு செய்ததற்கு அமைச்சர் வன்னி அரசு எதிர்ப்பு

Updated On : 3 ஜூலை 2026, 11:02 am IST
அமைச்சர் வன்னி அரசு | ஆளுநர் ஆர்லேகர் - கோப்புப் படம்
பகிர்:

மதுரையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ஆர்.வி. ஆர்லேகர் ஆய்வு செய்ததற்கு அமைச்சர் வன்னி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "மதுரை வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும் என்று தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்.

பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு இருக்க வேண்டாமா என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்படி அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.

Advertisement

Advertisement

மும்மொழிக் கொள்கை எனும் பெயரில் இந்தித் திணிப்பு, தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்வியைச் சீர்குலைக்கும் குலக்கல்வியான சனாதன கருத்தியலைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால்தான், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,284 கோடி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு சொல்லி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட பொறுப்பு ஆளுநர் இது குறித்து வாய் திறப்பாரா?

தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரி ஆற்றைத் தடுத்து நிறுத்தி, எமது உரிமையை பறிக்கும் வகையில் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொல்லி வருகிறது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு மறைமுகமாக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இசைவு இல்லாமல், கடும் எதிர்ப்பை மீறி மேக்கேதாட்டு அணை திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகத்துக்குமத்திய அரசு அனுமதி அளித்தது. தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை எதிர்த்து பொறுப்பு ஆளுநர் வாய் திறப்பாரா?

தமிழ்நாட்டின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்து எதுவும் பேசாத ஆளுநர் ஆர்லேகர், அவருக்கு முன்பு இருந்த ஆளுநர் ஆர்.என். ரவி போலவே தமிழர்களுக்கு தொடர்பில்லாத, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறி வருகிறார்.

கடந்த ஜூலை 1 ஆம் தேதிதான் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்லேகர் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் நலன்கள் குறித்து உள்துறை அமைச்சருக்கு ஏதேனும் கோரிக்கை வைத்தாரா?அல்லது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட வேண்டும் என ஆலோசனை பெற்று வந்தாரா என்று கேள்வி எழுகிறது.

2014-ல் மத்திய பாஜக ஆட்சி அமைந்ததும், தூய்மை கங்கை திட்டத்தை கொண்டு வந்தனர். நீர்வளத் துறையின்கீழ் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்கீழ் 2014 முதல் 2026 வரை செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ. 26,824.86 கோடியாகும். 26 ஆயிரம் கோடியை கொட்டிய பின்பும் கங்கை ஆற்றின் நிலை என்ன? மனித பிணங்களும், ஆலைக் கழிவுகளும் தானே அதன் அடையாளமாக இன்றும் உள்ளது. இது குறித்து வாய் திறப்பாரா பொறுப்பு ஆளுநர்?

காவிரி உரிமையை பாதுகாப்பது, வைகையை மீட்பது, தாமிரபரணியை போற்றுவது ஆகிய கடமைகளை தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும். அதற்கான திட்டங்களை, உத்திகளை முதல்வர் விஜய் மேற்கொள்வார்.

ஆளுநர் முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம். அதை விடுத்து, அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்த முயற்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.

தமிழ் வளர்த்த மதுரையில் வசுதைவ குடும்பகம் என்று தமிழர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் பொறுப்பு ஆளுநர் ஆர்லேகர். புறநானூறு சொல்லும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என எல்லோரையும் நேசிக்கும் தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை.

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆளுமையுள்ள புதிய முதல்வர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து வருகிறார். தமிழ்நாட்டின் இறையாண்மைக்குள் - நிர்வாகத்துக்குள் ஆளுநர் தலையிடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

summary

Minister Vanni Arasu opposes the inspection conducted by Governor RV Arlekar in Madurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments