நலத்திட்டங்கள், அரசுப் பணி ஆணை, சாலை வலம்... கரூரில் செய்யப்படும் ஏற்பாடுகள் என்னென்ன?
முதல்வர் விஜய் கரூர் சென்று மக்கள் சந்திப்பு நடக்கவுள்ள நிலையில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் பற்றி...
கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக நாளை (ஜூலை 10) முதல்வர் விஜய் கரூர் செல்லவுள்ளார். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
2025 செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவரும் முதல்வருமான விஜய், கரூரில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பிரசாரத்தில் அதிக கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
பாதுகாப்பு காரணமாக அங்கிருந்து உடனடியாக புறப்பட்ட விஜய், பின்னர் காணொலி வாயிலாக பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கோரினார். தொடர்ந்து, நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் மன்னிப்பு கோரினார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விஜய்யும் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது முதல்வராகியுள்ள விஜய், கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக நாளை (ஜூலை 10) கரூர் செல்லவுள்ளார். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அரசு திட்டங்களையும் அவர் தொடங்கிவைக்க உள்ளார்.
கரூர் மாவட்டம் வெண்ணைமலை கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் 10,000 பேர் வரை பங்கேற்கலாம் என்ற நிலைல்யில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இருக்கை வசதிகள், குடிநீர், மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன.
மேடைக்கு இடதுபுறத்தில் விஜய் வருவதற்கும் வலதுபுறத்தில் மக்கள் வருவதற்கும் வழிகள் வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறக்கூடிய இடத்தில் 2 அடுக்கு தடுப்பு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது
காலை 8 மணி முதல் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் காலை 11 மணிக்கு முதல்வர் விஜய் வருவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கரூரில் முதல்வர் விஜய் நாளை சாலைவலம் செல்ல திட்டமிட்டுள்ளார். கரூரில் சுமார் 10 கிமீ தூரம் சாலைவலம் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 6,700 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
Arrangements being made for Chief Minister Vijay upcoming visit to Karur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.