கரூரின் விளையாட்டு அரங்கம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு!
கரூரின் விளையாட்டு அரங்கம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு...
கரூர் மாவட்டத்தின் விளையாட்டு அரங்கு சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்படும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் கரூருக்கு இன்று (ஜூலை 10) வருவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் வெண்ணைமலை அடுத்த அட்லஸ் கலையரங்கில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, அரசு விழா நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வியாழக்கிழமை இரவே கரூர் சென்றடைந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இன்று காலை திடீரென கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கிற்குச் சென்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அங்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ. 6.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், மாவட்ட விளையாட்டு அலுவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
“கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்தும் வகையில் விரைவில் உள்விளையாட்டு அரங்கமும், விளையாட்டு மாணவ மாணவிகளுக்கான தங்கும் விடுதியும் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த மாவட்ட விளையாட்டு அரங்கு சர்வதேச வீரர்களை உருவாக்கும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற வீரர்களுடன் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டில் பங்கேற்று விளையாடினார்.
நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி மண்டல மேலாளர் எம். செந்தில் மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு ஆளுநர் ஜெ. டேவிட் டேனியல் ஆகியோரும் உடனிருந்தனர்.
Minister aadhav arjuna has announced that the Karur District Sports Stadium will be upgraded to international standards.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.