FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விரைவில் குறைந்த செலவில் மரபணு சோதனை கருவி: விருது பெற்ற இளம் விஞ்ஞானி தகவல்!

இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற திருச்சி மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் கூறியது பற்றி...

Updated On : 17 ஜூலை 2026, 1:54 pm IST
இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் - DIN
பகிர்:

குறைந்த செலவில் மரபணு சோதனை செய்ய கருவி உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் (38) நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் வல்லுநர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவின் 3 நாள் ஆண்டு மாநாடு புதுச்சேரி கணபதிச்செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் இளம் விஞ்ஞானிக்கான விருது இவருக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

Advertisement

Advertisement

கரு முட்டையைப் பொருத்தி குழந்தையைப் பெற்றெடுக்க வழி செய்யும் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் ஆரம்ப நிலையிலேயே கரு முட்டையைச் சோதித்து பிரச்னைக்கு உரிய குழந்தைகள் பிறப்பதைத் தடுத்து விடுகின்றன. மேலும், பொதுவாக ஸ்கேனில் ஒரு மகப்பேறு மருத்துவர் சந்தேகம் அடைந்தால் ஒரு தாயின் கர்ப்பத்தில் உள்ள கருவின் திசுவை எடுத்து சோதனை செய்யலாம். மூலக்கூறு நோயியல் மருத்துவர் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் அந்த மருத்துவர் சட்டப்பூர்வமாக 24 வாரத்துக்குள் குறிப்பிட்ட தாய்க்குக் கருச் சிதைவு செய்ய முடியும். பெரும்பாலும் குழந்தைக்குத் தந்தை, தாயின் மரபணு கடத்தப்படுவதால்தான் பிரச்னைக்குரிய குழந்தைகள் பிறக்கின்றன.

மேலும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி விட்டு தற்போது பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளேன். முக்கியமாக சென்னை ஐஐடியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நிதியுதவியுடன் ரூ. 3 கோடியிலான ஓர் ஆராய்ச்சியை எங்கள் குழு நடத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சி நிறைவடைந்த பிறகு மிகக் குறைந்த செலவில் மரபணு சோதனை செய்யும் கருவியைக் கண்டுபிடிக்க உள்ளோம். இப்போது ரூ. 1.5 லட்சம் செலவு பிடிக்கும் இந்தச் சோதனையை ரூ. 5 ஆயிரம் அல்லது ரூ. 10 ஆயிரத்தில் செய்ய முடியும். இதைத் தவிர இப்போது திருச்சி என்.ஐ.டி.யில் செயற்கை நுண்ணறிவு கேந்திரம் இருக்கிறது. அங்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் மரபணு தொடர்பான சோதனைகள் செய்துள்ளோம். இந்த நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி உள்பட நாட்டின் அதி முக்கியமான 7 நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்ய ரூ. 6 கோடிக்கான திட்டத்தையும் மத்திய அரசிடம் புதன்கிழமை இரவு (ஜூலை 16) அளித்துள்ளோம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களைக் காட்டிலும் பக்க விளைவு மாத்திரைகளால் இறப்பவர்கள்தான் அதிகம். அதனால் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களுக்கு என்ன மாத்திரை ? எந்த அளவுக்கு மாத்திரை வழங்க வேண்டும்? என்ற பங்களிப்புக்காகத்தான் எனக்கு இப்போது விருது வழங்கப்பட்டுள்ளது என்றார் மது பாலாஜி சிவக்குமார்.

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த இவர், கரோனா காலத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணிகளைச் சோதித்து அரசுக்கு அறிக்கை அளிப்பது உள்பட ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் பேரின் மாதிரிகளைச் சோதனை செய்த அனுபவத்தையும், ஒரு நாளைக்கு சுமார் 19 மணி நேரம் பணி செய்ததாகவும், அப்போது வீட்டுப் பக்கம் செல்ல முடியாமல் தன்னுடைய பிறந்த குழந்தையை 6 மாதம் வரை பார்க்காமல் இருந்ததாகவும் கூறினார்.

summary

Low-cost genetic testing kit coming soon: Award-winning young scientist

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments