தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையின் தவெக எம்எல்ஏ இளையராஜாவை தொடர்புகொண்ட ஒரு கும்பல், சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்கு ரூ.35 கோடி தருவதாகவும் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த கும்பல், இந்த விவகாரத்தை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவு ஏற்படும் என்றும் மிரட்டியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், இளையராஜா புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களான கரூரைச் சோ்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலர் காா்த்தி, நிதி நிறுவன உரிமையாளா் அதிபன் ரமேஷ் உள்பட 9 பேரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், குதிரை பேரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. குதிரை பேரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அவர்களின் உத்தரவில், “பொதுநல மனு என்பது நீதித்துறை கட்டமைப்பில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்று. குரலற்றவர்களுக்குக் குரல் கொடுக்கவும், நலிவடைந்தவர்களைப் பாதுகாக்கவுமே பொதுநல மனு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய வழக்கில் தமிழ்நாடு மாநில காவல்துறை ஏற்கனவே 9 பேரைக் கைதுசெய்து, ஆதாரங்களையும் சேகரித்துள்ளது.
செய்தித்தாள்கள், ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது. இதனால், இந்த பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” எனத் தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளங்களில் வெளியான செய்தியை கொண்டு புலன் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
A Bench of Chief Justice Sushrut Arvind Dharmadhikari and Justice G. Arul Murugan has said a court of law will not transfer a statutory investigation from one agency to another solely on the basis of newspaper headlines or viral video/audio clips circulating on digital platforms regarding the alleged ‘horse trading’ complaints
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.